தன்னம்பிக்கை கதைகள்-காசில்லாமல் வீடு வந்த இளைஞன்

Vizhimaa
0

Motivational Stories in Tamil

தன்னம்பிக்கையை இழக்கும் சில நேரங்களில் புத்துணர்ச்சி தரும் புதிய தன்னம்பிக்கை கதைகள்.இந்த கதை ஒரு நிமிட கதை போன்றதாகும்.


Motivational stories in Tamil



கதையின் தலைப்பு

காசில்லாமல் வீடு வந்த இளைஞன்


கதையின் மாந்தர்கள்

ஒரு இளைஞன், ஹோட்டல் மேலாளர்,டெலிவரி பாய்

கதை

வேலை தேடி சொந்த ஊரில் இருந்து அருகில் இருந்த நகரத்திற்கு வந்திருந்தான் அந்த வேலையில்லா பட்டதாரி இளைஞன்.வறுமையும் வேலையின்மையும் அவனை வாட்டி எடுத்தது.சுட்டெரிக்கும் வெயிலில் சொட்டு தண்ணியில்லாமல் வேலை தேடி லோ- லோ வென்று அலைந்து திரிந்தான் அந்த இளைஞன்.கையில் வெறும் 150 ரூபாய் மட்டுமே இருந்தது.காலை,மதியம் இருவேளையும் சாப்பிடாமல் இருந்த காசை பாதுகாத்து வைத்திருந்தான் அந்த இளைஞன்.

பசி வயிற்றைக் கில்லினாலும் தினம் ஒரு வேளை உணவுதான் என்பதை வறுமை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது.தெருதெருவாக அலைந்து திரிந்து வேலை கிடைக்காமல் இரவு 8 மணி பேருந்துக்காக ஏழு மணியளவில் பேருந்து நிறுத்துமிடமான பயணியர் நிழற்கொடைக்கு வந்து சேர்ந்தான்.

பசி மயக்கத்தில் உறங்கியவன் இரவு 9;30 மணி வரை உறங்கி விட்டான்.அவன் ஊருக்கு கடைசி பஸ் இரவு 9;00 மணிக்கே சென்று விடும்.இதற்கு மேல் ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் ஆட்டோ பிடித்து தான் செல்ல வேண்டும்.ஆட்டோ வாடகையோ 150 ரூபாய் கேட்பார்கள்.அதை நினைத்துக்கொண்டிருந்தவனுக்கு பசி கண்ணை கட்டியது.அவன் கையில் இருந்ததோ 150 ரூபாய் தான்.இதில் ஊருக்கு செல்வதா இல்லை வயிற்றை நிரப்புவதா என்று குழம்பிப் போய் நின்றான்.

காசை வைத்து ஊருக்கு சென்றாலும் பசியோடு தான் தூங்க வேண்டும்.பசி அனைத்து உணர்வுகளையும் வென்றது.ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்தான் அந்த இளைஞன்.நுழையும் முன் இங்கே ஹோம் டெலிவரி வசதிகள் உள்ளன என்று போர்டை படித்துக் கொண்டே உள்ளே சென்றான்.

ஹோட்டல் கடையின் மேலாளரிடம் சார் எனக்கு ஒரு சிக்கன் பிரியாணி வேண்டும் என்றான் 130 ரூபாய்,போய் உட்கார்ந்து சாப்பிடுங்கள் என்றார்.அந்த இளைஞனோ இல்லை, இல்லை இந்த பிரியாணியை நான் சொல்லும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் என்றான்.ஹோம் டெலிவரியா என்றான் ஹோட்டல் மேலாளர்.ஆமாம் சார் என்றான்.அப்படியென்றால் 150 ரூபாய் சார் சிக்கன் பிரியாணி என்றார் .அந்த இளைஞனோ No Problem sir,என்றான்.

 அந்த பிரியாணியை பார்சல் செய்து அதை அங்கு வேலை பார்க்கும் ஒரு ஊழியரிடம் கொடுத்து ஹோம் டெலிவரி செய்து விட்டு வருமாறு கூறினார் அந்த மேலாளர்.

இதை பார்த்து கொண்டே இருந்த நம் இளைஞன் அந்த பார்சலை பெற்றுக்கொண்ட ஊழியரை கவனமாக பின் தொடர்ந்து சென்றான்.

அந்த டெலிவரி பாய் தன்னுடைய பைக்கை நகர்த்தும் போது அவரிடம் போய் சார்,நான் தான் இந்த பார்சலை ஆர்டர் செய்தேன்.இதோ அந்த பில் என்று காட்டினார்.என் வீட்டில் என்னை தவிர இப்போது யாருமில்லை.நான் போனால் தான் இந்த பார்சலை வாங்க முடியும்.எங்கள் ஊரின் கடைசி பேருந்து 9 மணிக்கே சென்று விட்டது.இப்போது எனக்கு வேறு வழியில்லை,என்னை உங்கள் வண்டியில் ஏற்றிக் கொண்டு என் வீட்டில் விட்டு விடுங்களேன்.உங்களுக்கு உங்கள் வேலையும் முடிந்தது போல் இருக்கும் எனக்கும் வீட்டுக்கு சென்றது போல் இருக்கும் என்றான்.

கொஞ்சம் யோசித்த டெலிவரி பாய், மனிதாபிமான அடிப்படையில் அவரை வண்டியில் ஏற்றிக் கொண்டு அவருடைய வீட்டுக்கு சென்றார்.உணவையும் கொடுத்து விட்டு வந்தார்.தன்னுடைய எதார்த்தமான பேச்சாலும் புத்திசாலித்தனத்தாலும் அந்த இளைஞன் வீடு சென்று சேர்ந்தான்.


Motivational stories in Tamil


கதையின் நீதி

மதியால் விதியை வெல்லலாம்.புத்திசாலித்தனத்துடன் சற்றே சாதுர்யமான பேச்சால் வாழ்க்கையில் நினைத்ததை எளிதில் அடைய முடியும் என்பதையே இந்த கதை உணர்த்துகிறது.ஒரு வேலையில்லா பட்டதாரியின வாழ்க்கையானது மிகவும் கடினமானதே வேலை என்பதே இங்கு பிரதானம்.அதிலும் பசி என்பது அனைத்து உணர்வுகளையும் வெல்ல கூடியது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top